அமெரிக்காவில் பார்வையற்ற இந்தியர் ஒருவருக்கு முக்கிய பதவியை அதிபர் ஒபாமா அளித்துள்ளார்
அமெரிக்காவில் 2வது முறையாக பராக் ஒபாமா வெற்றி பெற்று அதிபராக பொறுப்பேற்றுள்ளார். கடந்த முறை ஆட்சியின்போது, திறமைவாய்ந்த இந்தியர்கள் பலருக்கு தனது அரசில் முக்கிய பொறுப்புகளை ஒபாமா வழங்கினார். தற்போதும் அதே போல் முக்கிய பதவிகளில் அமெரிக்க இந்தியர்களுக்கு வாய்ப்பு அளித்து வருகிறார்.


 இந்நிலையில், அரசின் கட்டிடக்கலை வாரியத்தின் உறுப்பினராக சச்சின் தேவ் பவித்ரன் என்ற அமெரிக்க வாழ் இந்தியரை நியமித்து ஒபாமா நேற்று முன் தினம் உத்தரவிட்டார். சச்சின் தேவ் பார்வையற்றவர். அவருடன் மேலும் பலரையும் உறுப்பினர்களாக நியமித்து ஒபாமா வெளியிட்ட அறிக்கையில், ‘சிறந்த அனுபவம் மற்றும் பொறுப்புணர்வுடன் செயல்படும் இவர்கள் புதிய பொறுப்புகளில் மேலும் சிறப்பாக பணியாற்றுவார்கள் என எதிர்பார்க்கிறேன்’ என்று கூறியுள்ளார். சச்சின்தேவ் இதற்கு முன்பு உடா பல்கலைக்கழகத்தில் மாற்றுதிறனாளிகளுக்கான மையத்தின் தொழில்நுட்ப திட்ட இயக்குனராக பணியாற்றியிருக்கிறார்.