பாலஸ்தீனத்தில் உள்ள காஸா பகுதியை ஹமாஸ் தீவிரவாத அமைப்பு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இவர்களுக்கும், அண்டை நாடான இஸ்ரேலுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடைபெற்று வருகின்றன

சமீபத்தில் இஸ்ரேல் தென்பகுதியில் உள்ள ஜேவிஷ் மாகாணம் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் 120-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். அதில் 3 பேர் உயிரிழந்தனர். 

இதையடுத்து நேற்று முன்தினம் முதல் காஸா மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. அதில், 13 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் கமாண்டர் அகமது ஜாபரி, அவரது பாதுகாவலர் முகமது அல்-ஹம்ஸ் ஆகியோரும் அடங்குவர். 

இவர்கள் காஸா பகுதியில் சென்ற போது குண்டு வீச்சில் உயிரிழந்தனர். காஸா பகுதி மீது இஸ்ரேல் போர் விமானங்கள் தொடர்ந்து குண்டு வீசி வருகிறது. இதனால், பல கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாயின. அதில் 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதற்கிடையே, இஸ்ரேல் தாக்குதலுக்கு ஹமாஸ் தீவிரவாதிகளும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இஸ்ரேல் வடக்கு பகுதியில் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்கி வருகின்றனர். அதில் இஸ்ரேலை சேர்ந்த 3 பேர் பலியாகினர். இதனால், காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் காஸாவில் போர் பதட்டம் நிலவுகிறது. 

பொதுமகள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். காஸா மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. அதிபர் ஒபாமா இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன் யாஹீவுடன் டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசினார். 

அப்போது இஸ்ரேல் மீது காஸா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தார். அதே நேரத்தில் தன்னை பாதுகாத்து கொள்ள காஸா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்தார். இந்த தகவலை அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு சிரியா கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் நாட்டுக்கான தனது தூதரை எகிப்து வாபஸ் பெற்றது. இந்த நிலையில், வன்முறையை தவிர்த்து அமைதியை நிலைநாட்டுமாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன் யாஹீவிடம் ஐ.நா. பொது செயலாளர் பான் கி மூன் வலியுறுத்தியுள்ளார்.

Post Tags: