தென் ஆப்ரிக்க அணியுடனான சூப்பர் 8 சுற்று 2வது பிரிவு கடைசி லீக் ஆட்டத்தில், ஒரு ரன் வித்தியாசத்தில் போராடி வென்ற இந்தியா ரன் ரேட் அடிப்படையில் அரை இறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது. கொழும்பு, பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் பந்து வீசியது. 2வது பிரிவில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் தலா 4 புள்ளிகள் பெற்றதால் தென் ஆப்ரிக்க அணி அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில், ஆறுதல் வெற்றிக்காக விளையாடியது. இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேற வேண்டும் என்றால், தென் ஆப்ரிக்காவை 31 ரன் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும் அல்லது சேஸ் செய்தால் 24 பந்துகள் எஞ்சியிருக்கும் நிலையில் வெற்றி இலக்கை எட்ட வேண்டும் என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டது. தொடக்க வீரர்களாக கம்பீர், சேவக் களமிறங்கினர். கம்பீர் 8 ரன் மட்டுமே எடுத்து மார்கெல் வேகத்தில் ஸ்டம்புகள் சிதற ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விராத் கோஹ்லி 2 ரன்னில் வெளியேற, இந்தியாவுக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. பீட்டர்சன் ஓவரில் ஒரு சிக்சர் விளாசிய சேவக் (17 ரன்) மீண்டும் சிக்சர் அடிக்கும் முயற்சியில் கிளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினார். அதிரடி காட்டிய யுவராஜ் 21 ரன் எடுத்து (15 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழந்தார். ரோகித் 25 ரன் எடுத்தார். கடைசி கட்டத்தில் ரெய்னா , கேப்டன் டோனி ஜோடி 6வது விக்கெட்டுக்கு ஸ்கோரை உயர்த்த போராடியது. ரெய்னா 45 ரன் எடுத்து (34 பந்து, 5 பவுண்டரி) கடைசி பந்தில் ரன் அவுட் ஆனார். இந்தியா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 152 ரன் எடுத்தது. டோனி 23 ரன்னுடன் (13 பந்து, 3 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா 19.5 ஓவரில் 151 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. 2வது பிரிவில் ஆஸ்திரேலியா (+0.464), பாகிஸ்தான் (+0.273), இந்தியா (,0.274) தலா 4 புள்ளிகளுடன் சமநிலை வகித்தாலும் ரன் ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின.