அமெரிக்காவில் இருந்து வெளியிடப்பட்ட திரைப்படம் நபிகள் நாயகத்தை அவமதிப்பதாக உள்ளது என்று உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இந்த சர்ச்சைக்குரிய திரைப்படத்தை வெளியிட்ட அமெரிக்காவைக் கண்டித்து லிபியா, பாகிஸ்தான், எகிப்து போன்ற நாடுகளில் பெரும் போராட்டங்கள் வெடித்தன. அமெரிக்க தூதரகங்கள் தாக்கப்பட்டன. இதற்கிடையே இந்த திரைப்படத்தை தயாரித்தவரை கொல்பவருக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலரை நான் பரிசாகத் தருவேன் என்று பாகிஸ்தான் மந்திரி அறிவித்தார். அமெரிக்காவுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்ததால், சர்ச்சைக்குரிய படத்தை தயாரித்தவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் அந்த படத்தை தயாரித்த நகோலா(55) என்பவரை கலிபோர்னியா போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஜாமீனும் வழங்கப்படவில்லை. இதற்கு முன் நகோலா தனது பெயரை பலமுறை மாற்றி, பல்வேறு பெயர்களில் கிரெடிட் கார்டுகள் பெற்று முறைகேடு செய்துள்ளார். போலியான வங்கிக் கணக்கு தொடங்கி பல்லாயிரக்கணக்கான டாலர் கடன் பெற்றுள்ளார். இதுதொடர்பாக கடந்த 2009ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நகோலா, 2011ல் விடுதலை ஆனது குறிப்பிடத்தக்கது.