சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் பங்கேற்கவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் பிராவோ காயம் அடைந்ததால், அவருக்கு பதிலாக குலசேகரா சேர்க்கப்பட்டுள்ளார். சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் வரும் 13ஆம் தேதி தொடங்கி வருகிற 28-ந் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடரின் தகுதிச் சுற்றுப் போட்டிகள் இன்று தொடங்கியது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ், யுவா நெக்ஸ்ட், யார்க்‌ஷைர் ஆகிய அணிகளில் சில மாற்றங்களை அங்கீகரிக்க, போட்டிகளுக்கான தொழில்நுட்ப குழு ஒப்புக்கொண்டுள்ளது. அதன்படி, சென்னை அணியில் இடம்பெற்றிருந்த மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர் டிவெய்ன் பிராவோ மற்றும் தமிழக வீரர் அனிருதா ஸ்ரீகாந்த் ஆகியோர் காயம் காரணமாக, அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். நடந்து முடிந்த 20 ஓவர் உலககோப்பையை வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணியில் இடம்பெற்றிருந்த பிராவோ, தொடைப்பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக உலககோப்பை தொடரில் பந்துவீச இயலவில்லை. அக்காயம் காரணமாகவே தற்போது சாம்பியன்ஸ் லீக் தொடரிலிருந்தும் அவர் விலகியுள்ளார். இதில் பிராவோவுக்கு பதிலாக இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் நுவான் குலசேகரா சென்னை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதேபோல் உள்ளூர் போட்டியின்போது கழுத்து எலும்பில் ஏற்பட்ட முறிவு காரணமாக விலகியுள்ள அனிருதா ஸ்ரீகாந்துக்கு பதிலாக, இடதுகை சுழற்பந்துவீச்சாளர் சதாப் ஜகாதி அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். மேலும், விரல் முறிவு காரணமாக யுவா நெக்ஸ்ட் அணியின் துவக்க ஆட்டக்காரர் உபுல் தரங்கா விலகியதால், அவருக்கு பதிலாக அஷான் பிரியன்ஜனா சேர்க்கப்பட்டிருக்கிறார். யார்க்‌ஷைர் அணியில் இடம்பெற்றிருந்த இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோ மணிக்கட்டு காயம் காரணமாக நீக்கப்பட்டு, விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான எட் வில்சன் சேர்க்கப்பட்டிருக்கிறார்.