ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 2,500 பேர் உயிருடன் புதைந்தனர். மண்ணில் புதைந்தவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்பதால், மீட்பு பணிகள் நேற்று மாலையே நிறுத்தப்பட்டுவிட்டது.ஆப்கானிஸ்தான் நாட்டின் பதக்ஷன் மாகாணத்தில் உள்ளது ஆப் பரீக் கிராமம். மலை அடிவாரத்தில் உள்ள இந்த கிராமத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. ஆயிரக்கணக்கனோர் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் காலை இப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக, மலையில் விரிசல் ஏற்பட்டு பயங்கரமான சத்தத்துடன் நிலச்சரிவு ஏற்பட்டது. மலையே பாதியாக பிளந்து, கீழே இருந்த வீடுகளை சில நொடிகளில் மண்ணும், பாறைகளும் மூடின. வீடுகளில் இருந்தவர்கள் என்ன நடக்கிறது என்பதை அறிவதற்குள் மண்ணில் உயிருடன் புதைந்தனர்.

இந்த நிலச்சரிவு ஏற்பட்டபோது, கிராமத்தில் உள்ள 2 மசூதிகளில் பெரும்பாலான மக்கள் வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அவர்களும் மண்ணில் புதைந்தனர். தூரத்தில் இருந்த மக்கள், இந்த கோர சம்பவத்தை பார்த்து பதறினர். தங்கள் கண்ணெதிரே நூற்றுக்கணக்கான சக கிராம மக்களும், உறவினர்களும், குடும்பத்தினரும் மண்ணில் புதைந்ததை கண்டு கதறி அழுதனர். அவர்களை மீட்பதற்காக ஓடோடி சென்றனர். அப்போது மீண்டும் இயற்கையின் விதி விளையாடியது. மண்ணில் புதைந்தவர்களை மீட்கும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டபோது, மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டு அவர்கள் மீது விழுந்தது. காப்பாற்ற போன அவர்களும் மண்ணில் புதைந்தனர்.

சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் ஆப்கான் பேரிடர் மேலாண்மை குழுக்களும், பல்வேறு பாதுகாப்பு படைகளை சேர்ந்த மீட்பு படைகளும் ஆப் பரீக் கிராமத்துக்கு விரைந்தன. இருப்பினும், பல மீட்டர் உயரத்துக்கு வீடுகள் மீது மண் விழுந்து கிடப்பதால் மீட்பு பணியை விரைவாக மேற்கொள்ள முடியவில்லை. மண்ணில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் புதைந்து விட்டன. நிலச்சரிவில் வீடுகள் புதைந்து பல மணி நேரமாகி விட்டதால், அவற்றில் சிக்கியவர்கள் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. எனவே, நேற்று மாலையுடன் மீட்பு பணி நிறுத்தப்பட்டது.

இதற்கு பதிலாக அப்பகுதியில் நிலச்சரிவால் வீடுகள் சேதமடைந்து வெட்ட வெளியில் தவித்து வரும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு வேண்டிய நிவாரணப் பணிகள் செய்யப்படுகின்றன. இதில், சிறுவர்களும், குழந்தைகளும் அதிகளவில் இருக்கின்றனர். இந்த மக்களை தங்க வைப்பதற்கு தற்காலிக முகாம்கள் அமைக்கப்படுகின்றன. ஆனால், முகாம் அமைக்கும் பொருட்களுக்கும், உணவு பொருட்களுக்கும் பற்றாக்குறை நிலவுகிறது.

இந்த விபத்தில் முதலில் 350 பேர் வரை இறந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஏராளமான வீடுகள் மண்ணில் புதைந்து இருப்பதால், பலி எண்ணிக்கை 2,500க்கு மேல் இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது. அதே நேரம், நிலச்சரிவில் 500 பேர் பலியானதாக பதக்ஷன் மாகாண நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாறுபட்ட தகவல்கள் வெளியாவதால், உண்மையான பலி எண்ணிக்கையில் சந்தேகம் நிலவுகிறது.

இந்த பகுதியில் தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்வதால் மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. மீட்பு பணிக்காக ஆப் பரீக் கிராமத்துக்கு வந்த மீட்பு படையினர், மலைப்பகுதியில் மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் வகையில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டு இருப்பதை பார்த்துள்ளனர். அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.