நபிகள் நாயகத்தை அவதூறாக சித்தரிக்கும் சினிமா படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய ஆசிய கிழக்கு நாடுகளில் வன்முறையும், அதை தொடர்ந்து கலவரமும் ஏற்பட்டுள்ளது. லெபனான் மற்றும் எகிப்தில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

லெபனானில் அமெரிக்க தூதரக அதிகாரிகள் 5பேர் கொல்லப்பட்டனர். இதை தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க தூதரக அலுவங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கலவர மோதல்களை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனாலும் எகிப்தில் கலவரம் ஓயவில்லை. நேற்று 4-வது நாளாக, மீண்டும் தலைநகர் கெய்ரோவில் கலவரம் நடந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் தக்ரீர் சதுக்கத்தில் திரண்டு நைல் பாங்கி அருகேயுள்ள அமெரிக்க தூதரகம் நோக்கி சென்றனர்.

அப்போது, அவர்களை செல்லவிடாமல் போலீசார் தடுத்தனர், அதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் போலீசார் மீது கற்களையும், தூதரகம் மீது பெட்ரோல் குண்டுகளையும் வீசி தாக்கினர், ஒருவர் பலி நிலைமையை சமாளிக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இருந்தும் வன்முறை அதிகரிக்கவே கூட்டத்தினரை நோக்கி போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில், 35வயது மதிக்கதக்க ஒருவர் உடலில் குண்டு பாய்ந்து பலியானார். மேலும் 27 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே கெய்ரோவில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு பலத்த பாதுகாப்பு அளிக்க அதிபர் மொகமது முர்வி உத்தரவு பிறப்பித்துள்ளார். நேற்று நடந்த சம்பவம் குறித்து எகிப்து ராணுவ மந்திரி ஜெனரல் அப்துல் பாத்அல்-சிசியுடன் அமெரிக்க ராணுவ மந்திரி வியான் பெனேட்டா டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசினார்.