அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட திரைப்படத்தில், இஸ்லாம் மதத்தை அவமதிப்பதாக கூறி, இஸ்லாமியர்கள் உலகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். குறிப்பாக அமெரிக்க தூதரகங்களை குறிவைத்து அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டங்களில் தூதரகங்கள் தாக்கப்படுவதுடன், அதிகாரிகளின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் கோபம் அடைந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, தங்கள் நாட்டு பிரஜைகளை தாக்கினால் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக நாட்டு மக்களுக்கு ஒபாமா ஆற்றிய உரையின் சுருக்கம் வருமாறு:-

அமெரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்துவதை பொறுத்துக் கொள்ள முடியாது. தாக்குதல் நடத்துபவர்கள் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது. அதற்காக அவர்களின் வழியை நாங்கள் பின்பற்ற மாட்டோம். அதேசமயம் அமெரிக்காவை சீண்ட யாரையும் அனுமதிக்க மாட்டோம். அமெரிக்காவில் மத சுதந்திரம் உள்ளது. இஸ்லாம் உள்ளிட்ட எந்த மதத்தின் பெருமையையும் குலைக்கும் செயல்களை நாங்கள் அனுமதிக்கவில்லை.

வன்முறைகளால் எந்த நியாயமும் கிடைக்காது. அப்பாவி ஆண்களையும், பெண்களையும் குறிவைத்து தாக்குவதை மன்னிப்பது மதம் கிடையாது. எனவே எங்கள் தூதரகங்களையும், துணை தூதரகங்களையும் தாக்குவதை தவிர்க்க வேண்டும். வெளிநாடுகளில் பணியாற்றும் அமெரிக்கர்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்போம். இதுபற்றி உலகம் முழுவதிலும் உள்ள அரசுகளை தொடர்புகொண்டு, எங்கள் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதுடன், அமெரிக்கர்களின் பாதுகாப்பிற்கு உதவி செய்ய வேண்டியது அவர்களின் பொறுப்பு என்று கூறி வருகிறோம். இத்தாக்குதல்களால் ஏற்பட்ட இழப்பிற்கு நியாயம் கிடைக்கும் வரை ஓயமாட்டோம்.

இவ்வாறு ஒபாமா கூறினார்.