முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கொச்சைப்படுத்தும் விதமாய் நடிகர் கமல்ஹாசன் தயாரித்து நடித்திருப்பதாகக் கூறிவிஸ்வரூபம் திரைப்படத்தை கண்டித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு மருதானை சினிசிட்டி திரையரங்கை முற்றுகையிடுவதாக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் முடிவெடுத்துள்ளது.

இது தொடர்பாக ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,

தொடர்ச்சியாக சினிமாக்கள் மூலம் முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் விதமான கருத்துக்களை வெளியிட்டு வரும் கமல்ஹாசன் இம்முறையும் விஸ்வரூபம் திரைப்படம் மூலமாக தனது இஸ்லாமிய எதிர்ப்புத் துவேசத்தைக் காட்டுவதின் மூலம் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும், ஒழுக்கம் கெட்டவர்களாகவும், சித்தரித்துள்ளதுடன் முஸ்லிம்கள் புனிதமாக கருதும் திருமறைக் குர்ஆனையும் கொச்சைப்படுத்தி இத் திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

21ம் தேதி திங்கள் கிழமை தமிழ்நாட்டில் இயங்கும் இஸ்லாமிய அமைப்புகளுக்கு இத்திரைப்படம் திரையிட்டுக் காட்டப்பட்டது. விஸ்வரூபம் திரைப்படத்தின் காட்சிகள் தமிழ் சினிமா வரலாற்றில் இது வரைக்கும் எந்தத் திரைப்படத்திலும் இல்லாத அளவு இஸ்லாத்தையும், முஸ்லிம்களும் கொச்சைப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாக தமிழகத்தின் பலம் மிகு இஸ்லாமிய அமைப்பான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அறிவித்துள்ளதுடன், இந்தியாவில் எந்தவொரு திரையரங்கிளும் இத்திரைப்படத்தை ஓட விடமாட்டோம் என்றும் அறிவித்துள்ளது.

இலங்கையிலும் இத்திரைப்படத்தை வெளியிட அனுமதிக்கக் கூடாது என்று ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பில் இலங்கை திரைப்பட வெளியீட்டுக் கூட்டுத்தாபனத்திற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டதுடன், ஜனாதிபதி மற்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோருக்கும் இத்திரைப்படத்தை தடை செய்யும்படி கோரிக்கை விடுத்து கடிதம் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் 25ம் திகதி விஸ்வரூபம் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள இவ்வேளையில் இலங்கையில் கொழும்பு மருதானை சினிசிட்டி திரையரங்கிலும் இத்திரைப்படம் திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(25-01-2013) ஜும்மா தொழுகையைத் தொடர்ந்து ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக சினிசிட்டி திரையரங்கை முற்றுகையிடுவதாக இன்று நடந்த ஜமாத்தின் தலைமை நிர்வாக கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.