ரஷ்ய குழந்தைகளை அமெரிக்கர்கள் தத்தெடுப்பதை தடுக்கும் சட்டத்துக்கு நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ஒருமனதாக ஆதரவு அளித்துள்ளனர். அதிபர் விளாடிமிர் புடினின் ஒப்புதலுக்கு இந்த சட்டம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் 7 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் பெற்றோர் ஆதரவின்றி தவிப்பதாக யுனிசெப் புள்ளிவிவரம்  வெளியிட்டுள்ளது. இந்நிலையில் ரஷ்ய குழந்தைகளை தத்தெடுக்க அமெரிக்கர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரஷ்ய குழந்தைகளை அமெரிக்க தம்பதிகள் தத்தெடுத்துள்ளனர். இதற்கு பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். '


ரஷ்யா போன்ற உலகின் பெரிய நாடுகள் தங்கள் நாட்டு குழந்தைகளை விற்க கூடாது' என்று ஒருதரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துஇ 'ஆதரவற்ற குழந்தைகளை அமெரிக்கர்கள் தத்தெடுப்பதன் மூலம் அவர்களின் எதிர்காலம் வளமாகும். அத்துடன் பெற்றோர்
இன்றி தவிக்கும் குழந்தைகளை ரஷ்யர்கள் தத்தெடுப்பதை ஊக்குவிக்கும்' என்று பலர் கூறி வருகின்றனர். இதற்கிடையில் மனித உரிமை மீறும் ரஷ்யர்களை தண்டிக்க வகை செய்யும் வகையில் அமெரிக்காவில் சமீபத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்ய குழந்தைகளை அமெரிக்கர்கள் தத்தெடுப்பதை தடுக்க வகை செய்யும் சட்டம் நாடாளுமன்றத்தில் நேற்று கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்துக்கு நாடாளுமன்ற மேலவையின் 143 உறுப்பினர்களும் ஒருமனதாக ஆதரவு அளித்து நிறைவேற்றினர். இந்த சட்டம் இறுதி ஒப்புதலுக்காக அதிபர் விளாடிமிர் புடினுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் ரஷ்ய  அமெரிக்க உறவில் நெருக்கடி அதிகரித்துள்ளது.