மத்தியப்பிரதேச மாநிலம் போபால் அருகே லால்காதி என்ற இடத்தைச் சேர்ந்த டாக்டர் ரோகித் என்பவருக்கும், டாக்டர் ஜெய்ஸ்ரீ நம்தேவ் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. நேற்று இருவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதற்காக அங்குள்ள மைதானத்தில் பிரமாண்டமான பந்தலும் மணமேடையும் அமைக்கப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. ஏராளமான உறவினர்கள் கூடியிருந்தனர். அந்த இடமே மகிழ்ச்சி வெள்ளத்தில் களை கட்டி இருந்தது.


மணமகன் டாக்டர் ரோகித், மணமகள் டாக்டர் ஜெய்ஸ்ரீ ஆகியோர் மணமேடையில் வந்து அமர்ந்து இருந்தனர். உறவினர்கள் ஒவ்வொருவராக வந்து மணமக்களை ஆசீர்வதித்துக் கொண்டு இருந்தனர்.

அப்போது திடீர் என்று ஒரு வாலிபர் உறவினர் போல் வந்து மேடை ஏறினார். கண் இமைக்கும் நேரத்தில் அவர் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மணமகளை நோக்கி சுட்டார். அதில் அவர் உடலில் குண்டுகள் பாய்ந்து துளைத்தது. அவர் ரத்த வெள்ளத்தில் மேடையில் சரிந்து விழுந்தார்.

இதைப்பார்த்த திருமண வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் என்னமோ ஏதோ வென்று பதறியடித்து ஓடினார்கள். இதற்கிடையே உறவினர்கள் சிலர் துப்பாக்கியால் சுட்ட வாலிபரை பிடித்துக் கொண்டனர். சிலர் மணமேடையில் விழுந்து கிடந்த மணப்பெண்ணை ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார்.

தகவல் கிடைத்ததும் போலீசார், விரைந்து சென்று வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். அவரது பெயர் அனுராக்சிங். இவர் டாக்டர் ஜெய்ஸ்ரீயை காதலித்து வந்ததாகவும் அவர் தன்னை ஏமாற்றி விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்ய முடிவு செய்ததால் தீர்த்துக் கட்டியதாக தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இந்த சம்பவத்தால் திருமண வீடு சோகத்தில் மூழ்கியது.

Post Tags: