பின்லேடன் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பு, இருப்பிடத்தை கண்டறிய, அமெரிக்கா உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. பல்வேறு யுக்திகளை கையாண்டது.



பின்லேடன் பாகிஸ்தானில் மறைந்து இருப்பதை அமெரிக்கா உறுதிப்படுத்தினாலும், பாகிஸ்தான் அதை மறுத்து வந்தது. பின்லேடன் தங்கள் நாட்டில் இல்லவே இல்லை என்று கூறியது.

இந்நிலையில் அமெரிக்கா உளவு நிறுவனம் பாகிஸ்தான் டாக்டர் ஷகீல் அப்ரிடியை அணுகி அவரது உதவியை கேட்டது. பின்லேடன் பதுங்கி இருப்பதாக கருதப்பட்ட அப்போட்டாபாத் பகுதியில் வீடு வீடாக சென்று போலியோ விழிப்புணர்வு பிரசாரம் செய்வதுபோல் நடித்து பின்லேடன் இருப்பிடத்தை கண்டறிந்து கூறுமாறு கேட்டுக்கொண்டது.

அதன்படி டாக்டர் ஷகீல் அப்ரிடி, ஒரு குழுவுடன் சென்று போலியான போலியோ விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டார். அதன் மூலம் பின்லேடன் இருப்பிடத்தை கண்டறிந்த அவர், அமெரிக்க உளவு நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன் பிறகே அமெரிக்க சிறப்பு படையினர் பின்லேடன் மறைந்திருந்த பங்களாவுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி அவனை கொன்றனர்.

பின்லேடன் கொல்லப்பட்ட உடன் டாக்டர் ஷகீல் அப்ரிடி பாகிஸ்தானை விட்டு தப்பிக்க முயன்றார். பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் எல்லையில் தோர்காம் என்ற இடத்தில் அவரை ராணுவம் கைது செய்தது. தற்போதுவரை அவர் ஜெயிலில்தான் உள்ளார்.

ஷகீல் அப்ரிடி டாக்டர் தொழில் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார். இவருக்கும் இவரது மனைவி இம்ரானா கபூர் பெயரிலும் வங்கிகளில் கணக்குகள் உள்ளன.

பாகிஸ்தான் அரசின் உத்தரவை தொடர்ந்து இவர்களது வங்கி கணக்குகள் நேற்று முடக்கப்பட்டன. பின்லேடன் தங்கள் நாட்டில் இல்லை என்று பாகிஸ்தான் நிர்வாகம் சொல்லி வந்த நிலையில் டாக்டர் ஷகீல் மூலம், பின்லேடன் இருப்பிடத்தை அமெரிக்கா கண்டுபிடித்தது.

இதன்மூலம் பின்லேடன் தங்கள் நாட்டில் இல்லை. அவன் எங்கு மறைந்து இருக்கிறான் என்று தெரியாது என பாகிஸ்தான் சொல்லி வந்தது பொய் என்று நிரூபணமானது. அந்த கோபத்தில்தான் பழிவாங்கும் நடவடிக்கையாகவே டாக்டர் ஷகீல் மற்றும் அவரது மனைவியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு இருப்பதாக பத்திரிகைகள் விமர்சித்துள்ளன.

Post Tags: